நகரும் மேகம் போல்.. | பா. நீலாம்பரி.



எந்நேரமும் வலி வர காத்திருக்கும்
நிறை மாத கர்ப்பிணியின்
வயிற்றில் உலகை எட்டி பார்க்க
துடிக்கும் குழந்தை போல...

எப்போது வேண்டுமானாலும்
கொட்டி தீர்த்து விட காத்திருக்கும்
சூல் கொண்ட மேகங்கள்
எப்போது, என்று கலந்தாலோசனை செய்து கொண்டிருக்க...

பெருமழையை தாங்கமுடியுமா
பெரும் யோசனையில்
கோதுமை காடுகள்
பார்த்துக் கொண்டிருக்க...

வெண் பஞ்சு மேகம் காற்றில்
தவழ்ந்து வந்து மரங்களில்
இளைப்பாறி கொண்டிருக்கிறது.
இடி மின்னல் மழை பற்றிய கவலையின்றி...

வாழ்க்கையும் இப்படி தான்
நம் கை மீறி நடக்கும் செயலை
கட்டுப்படுத்த இயலாமல்
காற்றின் போக்கில்
நகரும் மேகம் போல்...
காலத்தின் கைகளில் நகரும்
வாழ்க்கையும்...

பா. நீலாம்பரி 

Post a Comment

0Comments
Post a Comment (0)