பெண்ணே நீ விழித்தெழு | ஷர்மிளா

Image Source: medium.com

பெண்ணே நீ விழித்தெழு

பெண்ணியம் பேசிடும் நாட்டினிலே
கண்ணிய மின்றி நடந்திடும்
கயவர்களைக் கண்டால்
கற்சிலையா யிருந்திடாது!
காற்சிலம்பைக் கையிலெடுத்த!
கண்ணகியாய் நீயும் மாறியே!
கயவர்களைக் களையெடுத்திடல் வேண்டுமே!

வஞ்சிக் கொடி உன்னிடத்திலே
வஞ்சனை செய்திடும்
நயவஞ்சகரைக் கண்டால்!
அஞ்சி நீயும் இருந்திடாது!
வஞ்சினமது கொண்டு
பாரதி கண்ட புதுமைப் பெண்ணாய்!
சாரதியாய் நீயும் மாறியே!
சதிகளை தகர்த்திடல் வேண்டுமே!

பேதையென நீயும்
பேழைக்குள் முடங்கிடாது!
மேதையாய் மாறியே
மேதினியில் நின்
புகழ் பரப்பிடல் வேண்டுமே!
பூவை யுந்தன் வாழ்வினிலே!
புயல்கள் பல வந்திடினும்!
கயலென நீயும் மாறியே
கரை சேர்ந்திடல் வேண்டுமே!

பாவை நீயும் பாரினில் சிறந்திட!
சோதனைகளைக் கண்டு சோர்ந்திடாது!
விதியினை நினைந்து
வீணரா யிருந்திடாது!
மதியினை வியூகமாக்கியே
விந்தைகளை நீயும்
விதைத்திடல் வேண்டுமே!

 வழ்த்துக்களுடன்!!!

 - ஷர்மிளா, ஃபெமினோஸ் மதுரை. 

Post a Comment

0Comments
Post a Comment (0)